திங்கள், ஜூன் 19

அருள் மிகு முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன்பட்டினம்.

மூலவர் : ஞானமூர்த்தீ
அம்பாள் : முத்தாரம்மன்
பெருமை : சுயம்பு
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : கடல்
ஆட்சி : அம்பாளே
சிறப்பு : கடற்கரை
ஊர் : குலசை
புராணபெயர் : வீரைவளநாடு
மாவட்டம் : தூத்துக்குடி

பிரார்த்தனை

அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் உடினே குணமாகிவிடுகிறது.கை கால் ஊனம் , மனநிலை பாதிப்படைந்தவர்கள் , ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் குணமடைகின்றனர்.சொத்துகள் இழந்தவர்கள் இத்தலத்தில் வழிபட்டு அந்த கஷ்டத்திலிருந்து மீள்வதாக கூறுகிறார்கள்.வழக்கு வியாபார நஷ்டம் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு சுபிட்சம் அடைய இத்தலத்து முத்தாரம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்தி கடன்

மாவிளக்கு பூஜை, அங்கபிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், உண்டியல் காணிக்கை ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக செலுத்தப்படுகிறது.

கோயிலின் சிறப்பம்சம்

சுவாமியும் அம்பாளும்:

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் இருந்தால் அதை பரிவர்த்தனை யோகம் என்பர்.அதுபோல் இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கிச் சிவமயமாக உள்ளாள். அம்பாள் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக உள்ளார். இதை பரிவர்த்தனை நிலை என்பர்.இங்கு அம்பாளுக்கு தான் ஆட்சி.

மதுரையிலும் இதே நிலைதான். எனவே மதுரையில் உள்ள மந்திரம், யந்திரம், தந்திரம் இங்கும் பின்பற்றப்படுகிறது.தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம், எந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்திப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு.

முத்தாரம்மன் பெயர்காரணம்:

அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.முத்துக் கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச்சுற்றி நீர் கட்டச் செய்வர். இதனால் முத்துநோய் இறங்குகிறது.முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை , முத்து + ஆற்று + அம்மன் =முத்தா (ற்ற) ரம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள்.

தல பெருமைகள்

*சுவாமி அம்பாள் ஒரே பீடத்தில் வடக்கு பார்த்து இருக்கிறார்கள்.

*சுயம்பு வாக தோன்றியது.

*அம்மை நோய் குணமடைய இங்கு வழிபடலாம்.

*பிள்ளை வரம் வேண்டுதலுக்கு பெயர் பெற்றது.

*41 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் லெப்ரஸி(தொழுநோய்),மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நோய் குணமாகிறது.

தல வரலாறு :

1934 க்கு பின்புதான் இக்கோயில் தோன்றியது. சுயம்புவாகத் தோன்றிய சுவாமி அம்பாள் விக்ரகங்களே வழிபாடு செய்யப்பட்டு வந்தன.மைலாடி என்ற ஊரில் ஆசாரி ஒருவர் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு சிலை செய்து,அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்பு என்று கூற, அதே போல் அர்ச்சகர் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை சுயம்பு அருகே வைத்து வழிபடு என்று கூறி அதுபடியே நடந்தது.அம்பாள் தன் திருமேனியை தானே தேர்ந்தெடுத்தாள் என்பது இக்கோயில் வரலாற்றின் தனி சிறப்பு.

முக்கிய திருவிழாக்கள்

தசரா பெருந் திருவிழா(10 நாள்) புரட்டாசி நவராத்திரி விஜய தசமி அன்று கடற்கரையில் மகிஷாசுர சம்காரம்.இதுவே இத்தலத்தின் மிகப் பெரிய விழா ஆகும். மாவட்டத்தின் தென்பகுதி முழுவதையும் திருவிழாக் கோலமடையச் செய்து ஊர்கள் தோறும் இல்லம் தோறும் கொண்டாடப்படும் விழாவாக அமைகிறது.

ஆடிக்கொடை திருவிழா ( 3 நாள்) குறவன் குறத்தி வேஷம் கட்டுதல், காணிக்கை பிச்சை எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தல்.

சித்திரை அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

ஐப்பசி விசு அன்று சிறப்புத் தீபாராதனைகளும் அன்னாபிசேகமும் நடைபெறுகின்றன.

திருக்கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடுகளும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளிச் சொக்கப்பனைத் தீபம் ஏற்றுதல் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

மார்கழி தனூர் மாத பூஜை விசேசம்

மாசி மாதம் மகாசிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருச்செந்தூரிலிருந்து 12 கி.மீ.

தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ.
கன்னியாகுமரியிலிருந்து 72 கி.மீ.
திருநெல்வேலியிலிருந்து 70 கி.மீ.

தங்கும் வசதி : பக்தர்கள் தங்குவதற்கு கோயிலில் சேவார்த்திகள் தங்கும் மண்டபம் உள்ளது.குடும்பத்தோடு வரும் பக்தர்கள் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்

கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை.

போக்குவரத்து வசதி : *திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர்.
*அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்த புரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக