திங்கள், ஜூலை 3

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

அம்மன் : மாரியம்மன்
பிறபெயர் : முத்துமாரி
பெருமை : சுயம்பு
சிறப்பு : ஸ்ரீசக்கரம்
அம்பிகை : துர்க்கை
தலமரம் : வேம்புமரம்
தீர்த்தம் : வெல்லகுளம்
ஊர் : புன்னைநல்லூர்
பழையபெயர் : புன்னைவனம்
மாவட்டம் : தஞ்சாவூர்

பிரார்த்தனை

*அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும்.இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.

*தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் , கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள்,உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் , உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள்.

*மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்

நேர்த்தி கடன்

*அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர்..உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகிறார்கள்.சொரி சிரங்கு இருந்தவர்கள் உப்பு வாங்கிப் போடுகின்றனர்.

*ஆடு, மாடு , கோழி காணிக்கை தருகின்றனர்.கணவருக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலை நேர்த்திகடனாக செய்கின்றனர்.

*முடிக்காணிக்கை,பால்குடம் எடுத்தல், பால்காவடி,அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும்

*தவிர திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாத்துகிறார்கள்

*கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

கோயிலின் சிறப்பம்சம்

*சுயம்பு அம்மன் :

மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது. விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிசேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்.அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.தைலாபிசேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.

*உள்தொட்டி நிரப்புதல் :

அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது.அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர்.இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போதுவரை உள்ளது.இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது

தல பெருமைகள் :

*சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆன அம்மன்

*சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.

*அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே.அபிசேகங்கள் கிடையாது.

*உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.

*அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

*பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது.

*கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.

*இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார்.

*ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும்.

*ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.

*இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும்.

*புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.


தல வரலாறு :

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728 1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

*ஆடி மாதம் முத்துப்பல்லக்கு

*ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.

*புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா

*தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைவர்.

*வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி,தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

பொது தகவல்கள்

*முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :

தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ.

*தங்கும் வசதி : குடும்பத்தோடு வருபவர்கள் தஞ்சை நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.தஞ்சை நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.

கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.

*போக்குவரத்து வசதி :

*தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது.தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு சென்றடைவது எளிது.

*அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சை
*அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.