திங்கள், ஜூன் 12

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி


அம்மன் : மாரியம்மன்
பிறஅம்மன் : வாழவந்தம்மன்
பிறஅம்மன் : ராக்காச்சிஅம்மன்
பிறஅம்மன் : பேச்சியம்மன்
பிறஅம்மன் : முப்பிடாரியம்மன்
காவல்தெய்வம் : கருப்பசாமி
முக்கிய தீர்த்தம்: வைப்பாறு
பிறதீர்த்தம் : : அர்ச்சுனாநதி.
ஊர் : இருக்கன்குடி.
மாவட்டம் : விருதுநகர்

பிரார்த்தனை

குழந்தை வரம் கேட்டல், கல்யாண வரம் வேண்டுதல்,உடல்உறுப்புகள் குறைபாடுகள் தீர நேர்ந்து கொள்ளுதல், அம்மை நோய் குணமாக வேண்டிக்கொள்தல், பார்வை இல்லாத பாவத்தை நீக்கி பார்வை தர வேண்டிக்கொள்ளுதல் ஆகியவை இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனைகள் ஆகும்.இவை தவிர அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக கூறுகிறார்கள்

நேர்த்தி கடன்

அம்மனுக்கு அக்னி சட்டியும் ஆயிரங்கண்பானையும் எடுத்து அருளோடு வலம் வந்து வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.இது தவிர இருக்கன்குடி தாய்க்கு நேர்த்திகடனாக கயிறு குத்துதல்,கெடா வெட்டுதல் ஆகியவையும் , உடல் குறைபாடுள்ளவர்கள் உருவபொம்மை செய்து வைத்து வழிபடுகிறார்கள், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

அம்மனுக்கு விளக்கு போடுதல்,அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

கோயிலின் சிறப்பம்சம்

அம்மன் தோற்றம்:

பொதவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும்.ஆனால் இந்த அம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.

இருகங்கை குடி : அம்மன் தலம் அமைந்துள்ள இந்த ஊரின் தெற்கே பாயும் வைப்பாறு மற்றும் அர்ச்சுனா நதிகள் சூழ அன்னை குடிகொண்டுள்ள திருக்கோயில் அமைந்துள்ளது. இருகங்கைகள் கூடுவதால் இருக்கங்(ன்) குடி என்ற கூற்றில் இவ்வூர் போற்றப்படுகிறது.

அர்ச்சுனன் நதி :

அன்னையின் திருக்கோயிலுக்கு வடக்கே தவழும் அர்ச்சுனா நதி மேற்கே வத்திராயிருப்பு மலை எனப்படும் மகாலிங்க மலையிலே உற்பத்தியாகிறது. முன் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காடுகளில் திரிந்து கொண்டு இம்மலையடிவாரத்திற்கு வந்த போது நீராடுவதற்கு இடம் இல்லாமையால் அர்ச்சுனன் கங்கையை வணங்கி வருணக் கணையால் பூமியை பிளந்து அப்பிளவிலிருந்து தோன்றி பெருக்கெடுத்த ஆற்றில் பஞ்ச பாண்டவர்கள் திரௌபதியுடன் நீராடி மகிழ்நதார்கள் .அவ்வாறு தோன்றிய ஆறே அர்ச்சுனன் ஆறு என்று பெயர் பெறுவதாயிற்று.

இருக்கண்குடி யின் புராணப்பெயர்கள் : இருகங்கைகுடி, இருக்கங்குடி

தல பெருமைகள் :

*இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

*அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்ச்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
*மருத்துவர்களால் கை விடப்பட்ட அம்மை,தீராத வயிற்று வலி,கை கால் ஊனம் ஆகிய நோய்கள் குணமாகும் அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.

*மருத்துவர்களால் கை விட்ட பின்புகூட இத்தலத்தில் வழிபடுவோர்க்கு கண்பார்வை கிடைக்கும் அதிசயம் நடக்கிறது.

*ஆறுகள் புடைசூழ நடுவே உள்ள ஆற்றுத் திட்டில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் கிழமேல் அளவு 178 அடி , தென்வடல் அளவு 149 அடி

* அழகிய விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகத்தில் அருட்கலமாகிய மாரியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.

*தென் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய புகழையுடைய இக்கோயில் இவ்வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்

தல வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இப்பக்கத்தில் சாணி பொருக்குவதற்காக வந்த ஒரு பூசாரிப்பெண் தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் வைத்த கூடையை எடுக்க முடியாது திண்டாடினாள்.கூட்டம் கூடியது.அப்போது அப்பெண் அருள் கொண்டு ஆடினாள். அவள் நான் மாரியம்மை எனது திருமேனி இங்கே மணலில் புதைந்து கிடைக்கின்றது.என்னை எடுத்து வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.அதுபோலவே மணலை தோண்டி அம்மை திருவுருவச்சிலையை கண்டெடுத்து சேவல் கூவாதலும் கழச்சிச் செடி முளைக்காததுமாகிய அவ்விடத்திலேயே அன்னை கட்டளையிட்டபடி கோவிலிலே நிலை நிறுத்தி வழிபடுவராயினர்.அன்று முதல் இன்று வரை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வருகிறாள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாதலால் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.

முக்கிய திருவிழாக்கள்

ஆடி வெள்ளி திருவிழா : ஆடி கடைசி வெள்ளிக்கு முன் வெள்ளி கொடிஏற்றம் செய்து அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் உற்சவர் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளச் செய்து அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருளச்செய்யப்படுகிறாள்.

தை வெள்ளி திருவிழா , பங்குனி வெள்ளி திருவிழா.

தைகடைசி வெள்ளி, பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக்காட்சி ஆகும். விழாக் காலங்களில் அம்மன் அருள்பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து கூடி நேர்த்திகடன் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

மேற்கண்ட மாதங்களின் கடைசி வெள்ளி க்கிழமைகளில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வர் .


பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருதுநகரிலிருந்து 32 கி.மீ.

சாத்தூரிலிருந்து 8 கி.மீ.
அருப்புக்கோட்டையிலிருந்து 32 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ.
மதுரையிலிருந்து 90 கி.மீ.

இவை தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சாத்தூர் அல்லது ,அருப்புக்கோட்டை உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றுவரலாம்

கட்டணம் ரூ.100 முதல் ரூ.300 வரை.

போக்குவரத்து வசதி :

பஸ்வசதி : சாத்தூர்,அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பஸ்கள் உள்ளன.

அருகில் உள்ள ரயில் நிலையங்கள் : சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை.

அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் மடப்புரம்


அம்மன் : பத்ரகாளி
கோலம் : சம்ஹாரம்
கிரீடம் : அக்னி
உயரம் : 13 முழம்
கம்பீரம் : குதிரை
காவல்தெய்வம் : அய்யனார்
தலமரம் : வேம்பு
தீர்த்தம் : பிரம்மகுண்டம்
ஊர் : மடப்புரம்.
மாவட்டம் : சிவகங்கை.

பிரார்த்தனை

: செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.

பத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது.

வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.

நேர்த்தி கடன்

ஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது.

அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன.

அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.

கோயிலின் சிறப்பம்சம்

பத்ரகாளியம்மன் தோற்றம்:

சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினயையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது.

காளி நிற்கும் பீடம் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.

அடைக்கலம் காத்த அய்யனார்

மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும்.இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்

விநாயகர் : வினை தீர்க்கும் விநாயகர்

தீர்த்தம் : பிரம்ம குண்டத்தீர்த்தம்.

மணிகர்ணி தீர்த்தம்

தல பெருமைகள்

*அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது.

*மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு.

*ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.

*தேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு

*மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

தல வரலாறு :

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதி கேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.மேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து

எல்லை காட்டினார்.இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள்.அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.மிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.

முக்கிய திருவிழாக்கள்

வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது
பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம்.

தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மதுரையிலிருந்து 19 கி.மீ.
சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.

தங்கும் வசதி :

கோயில் விடுதிகள் பொங்கல் மண்டபம்,பாலன் மண்டபம்.

கட்டணம் ரூ.200 முதல் ரூ.300 வரை.

அருகிலுள்ள திருப்புவனத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.

கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 வரை.

போக்குவரத்து வசதி : *மதுரை,சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது..

*அருகிலுள்ள ரயில் நிலைம் மதுரை, மானாமதுரை.
*அருகிலுள்ள விமான நிலையங்கள் மதுரை.